வணக்கம்!
குமரிமாந்தனின் பரிணாம வளர்ச்சியையும் அவன்
மொழிக்கு எழுத்துருவம் கொடுத்ததையும் பற்றி முன்னே கூறி இருந்தேன். இவ்வாறாக எழுத்துருவம்
பெற்றதாக கருதப்படும் நம் தமிழ் மொழி, இப்படி ஒரு அழியா புகழையும் மாட்சிமையையும் பெற
ஆரம்பித்தது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். பரிணாம வளர்ச்சியின் விளைவாகக்
குமரி மாந்தன் தன் மொழிக்கு எழுத்துருவம் கொடுத்தது முதல் தொல்காப்பியம் வரையிலான தமிழ்
வரலாறு மிகவும் சுவாரசியமானது. தொல்காப்பியம் தான் இது வரையில் தமிழில் கண்டெடுக்கப்பட்ட
மிகவும் பழமையான நூல் என்பதால் தான் நான் இங்கு தொல்காப்பியத்தை ஒரு காலக்குறியாக குறிப்பிட்டுள்ளேன்.
தொல்கப்பியத்தின் காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டாக இருக்கக்கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.
தொல்காப்பியம் எனும் கடலைப்பற்றி மற்றொறு பதிவில் விளக்கமாக காண்போம்.
இப்படி ஒரு பழமையான மொழிக்கு, அது தோன்றிய காலத்திலேயேவா
பெயர் வைத்திருப்பார்கள்? பெயர் என்பதே ஒரு பொருளை மற்ற பொருட்களிலிருந்து வேறுபடுத்திக்
காட்டத்தானே பயன்படுகிறது. குமரிமாந்தன் அவன் மொழிக்கு எழுத்துருவம் கொடுத்த போது இந்த
மொழியை தவிற வேறு எந்த மொழியும் வழக்கில் இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அவனது மொழியை
வேறு எந்த மொழியிலிருந்தும் வேறுபடுத்திக்காட்ட வேண்டிய அவசியமே அவனுக்கு இருந்திருக்காது.
அதனால் தமிழுக்கு பெயர் வைத்தது இந்த தொடக்கநிலை தமிழனாக இருக்க சாத்தியம் இல்லை. நம்
மொழிக்கு பெயரிட்ட போது கண்டிப்பாக அது நல்ல வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். தமிழைத்
தவிற வேறு மொழிகளும் வழக்கில் இருந்த காலத்தில் தான் அதற்கு பெயர் வைக்க வேண்டிய அவசியம்
உண்டாகி இருக்கக்கூடும் என்பதே தருக்கம்.
தமிழ் எழுத்துக்களும் குமரி மாந்தனும்:
தமிழிற்கு பெயரிடப்பட்ட அந்த காலத்திலே தமிழ்
எழுத்துக்களும் நல்ல வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இப்போது இந்த எழுத்துக்களின்
வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொள்வோம். குமரிமாந்தன் அவன் மொழிக்கு எழுத்துருவம் கொடுத்தபோது
அவன் அதை எந்த ஒரு இலக்கிய நயத்துடனும் செய்திருக்க மாட்டான். அவன் முதலில் எழுத ஆரம்பித்த
காலம் அது. அவன் எழுதிப்பழக ஆரம்பித்த போது அவனுக்கு ஏடுகளோ பலகைளோ இருந்திருக்காது.
குகைச்சுவர்கள், பாறைகள், அவன் பயன் படுத்திய பாத்திரங்கள் போன்றவைகளே அவனுக்கு எழுத்துப்பலகைகளாக
பயன்பட்டிருக்கும். இவ்வாறு அவன் செதுக்கிய கல்வெட்டுகளே தமிழின் முதல் ஆவணங்கள். அவனது
இந்த கல்வெட்டு பதிவுகளின் எழுத்துக்கள் பெரும்பாலும் சித்திர வடிவிலேயே இருந்ததாக
அகழ்வாய்வுகள் கூறுகின்றன. இந்த சித்திர எழுத்துக்களை இன்றைய ஆய்வாளர்கள் கண்டெடுத்தப்போது
அவர்கள் அதை “ப்ராமி” என்றும், பல திராவிட மொழிகளுக்கு மூலமாக இருந்த இந்த மொழியை மூலதிராவிடமொழி
என்றும் அழைத்தனர். இவ்வாறு மூல திராவிடமொழியாக திகழ்ந்த தமிழில் இருந்து பிரிந்தவை
தான் பிற திராவிட மொழிகளாகும். மூலதிராவிடமொழியையும் அதன் கிளை மொழிகளையும் இனைத்தால்
அதை ஒரு திராவிட மொழிக்குடும்பம் என்று அழைக்கலாமா?
ப்ராமி எனப்படும் தமிழ் ஆவணங்கள்:
இந்த மூலத்திரவிடமொழி, அதாவது இந்த சித்திர
எழுத்துக்களாலான மொழி தமிழை ஒத்து இருப்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. அதாவது இந்த சித்திர
எழுத்துக்களுக்கும் நம் இன்றைய தமிழின் எழுத்துக்களுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக
தமிழ் ப்ராமி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் தமிழ் ப்ராமி பதிவுகள் எகிப்து
நாட்டில் கண்டெடுக்கப்பட்டதாக “தி இந்து” (THE
HINDU) நாளிதழிலே வந்த செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள்
என நம்புகிறேன்.
உலகெங்கும் தமிழ் ஆய்வு இன்றும் நடந்தவண்ணம் தான் உள்ளது. கண்டெடுக்கப்பட்ட
எகிப்து ப்ராமியிலிருந்த மொழி தமிழ் தான் என்றும் அது கி.மு ஒன்றாம் நூற்றாண்டை சேர்ந்ததாக
இருக்கக்கூடும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். திராவிட மொழிகளில் பழமையானது தமிழ்
தான் என்பதையும் தமிழ் பல திராவிட மொழிகளுக்கு தாய் என்பதையும் திராவிட மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் கூறியுள்ளனர். திராவிட
மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் திரு. பர்ரோவும், திரு. எமனோவும் இணைந்து “திராவிடச்
சொற்பிறப்பியல் அகராதி” (Dravidian Etymological Dictionary) வெளியிட்டனர் என்றால்,
தமிழ் மொழியின் வளர்ச்சியை உணருங்கள். தமிழ் எழுத்துக்கள் அன்றைய ப்ராமியின் சித்திர
எழுத்துக்களிலிருந்து தான் உருவானது என்பதை அறிய அன்றைய சித்திர வடிவ ப்ராமி எழுத்துக்களையும்
இன்றைய தமிழ் எழுத்துக்களையும் ஒப்பிட்டு பார்த்தாலே போதுமானதாக இருக்கும்.
தமிழின் இருண்ட காலம்:
குமரிகண்டதிலிருந்து தொல்காப்பியம் வரை தமிழ் எழுத்துக்களின்
வளர்ச்சியை தமிழ் மொழியின் வளர்ச்சியாகவே கருதலாம். இந்த எழுத்துகளை பற்றி அறிய நம்மிடம்
இருப்பது தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்த கல்வெட்டுகள், நடுகற்கள், செப்பேடுகள் போன்றவைதான்.
தொல்காப்பியம் வரையிலான வரலாறு இன்னும் சரியாக வகுக்கப்படாமல் தான் உள்ளது. இதற்கு
காரணம் அந்த காலத்தில் இருந்த சங்க இலக்கியங்களும் அவற்றின் நூற்பதிவுகளும் கடல்கோள்களுக்கு
இறையானது தான். எனவே அந்த காலத்தை தமிழ் வரலாற்றின் இருண்ட காலம் என கூறினால் அது மிகையாகாது.
தமிழின் முதல் இரண்டு சங்கங்களுமே இந்த இருண்ட காலத்தில் தான் இருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த இரண்டு சங்கங்களின் நூல்கள் கடலுக்கு மட்டுமே கிடைத்த தமிழ் புதையல்களாக மறைந்துவிட்டன.
இந்த சங்க இலக்கியங்கள் பிறப்பதற்கு முன் நம் குமரி மாந்தன் முழுமையான மரத்தமிழனாக
வளர்ந்திருபான் என்பது இங்கு தெளிவாகிறது
இந்தக் காலத்தில் தமிழன் அடைத்த வளர்ச்சி பற்றிய
தகவல்கள் இன்னும் ஒரு திறக்கபடாத பூட்டாகவே உள்ளது. ஆனால் சித்திர எழுத்துக்களிலிருந்து
இன்றைய தமிழின் எழுத்துக்கள் இப்படித்தான் உருவாகியிருக்கக்கூடும் என யூகிக்கவும்
அதை பற்றி ஆராயவும் உதவும் ஒரு திறவுகோலாக ப்ராமிக்கள் பயன்படுகின்றன. தமிழிலிருந்து பல திராவிட மொழிகள் பிரிந்தது கூட
தொல்காப்பியத்திற்கு பிறகு தான் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. இன்று நாம் கொண்டாடும்
பல தமிழ் இலக்கிய நூல்கள் தொல்காப்பியத்திற்கு பிறகு விளைந்தவை தான். அதாவது அவை எல்லாமே
மூன்றாம் தமிழ்ச் சங்கத்தின் நூல்கள் தான். அதற்கு முன்னே தமிழ் முழுமையான வளர்ச்சி
அடைந்திருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட சிறந்த இலக்கிய படைப்புகளை அன்றைய தமிழர்கள்
உலகிற்கு கொடுத்திருக்க முடியும். இதன் மூலம் நம் தாய் மொழியின் வயதையும் அதன் வளர்ச்சியின்
ஆரம்ப விளிம்புகளையும் உங்களால் உணர முடிகிறதா?
தமிழ் எழுத்துக்கள் சித்திர எழுத்துக்களிலிருந்து
இப்படித்தான் வந்திருக்குமென கூறியது முற்றிலும் யூகங்களே. கிடைத்த ப்ராமி ஆதாரங்கள்,
கல்வெட்டுகள் மற்றும் பல தொல்பொருள் ஆதாரங்களின் விளைவே இந்த கருத்துக்கள். இதுநாள்
வரை குமரி மாந்தர்களாக இருந்த தொடக்கநிலை தமிழர்கள் இந்த இருண்ட காலத்தில் தான் உலகம்
போற்றும் தமிழர்களாக பரிணாம வளர்ச்சி அடைந்தார்கள்
என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மையாகிறது.
இனி வரும் பதிவுகளில் பண்டைத் தமிழர்களின் அறிவு
மாட்சிமையையும் அதனால் விளைந்த “தமிழ்” என்ற பெயர் பற்றியும் நம் மொழியை
பற்றிய மேலும் பல தகவல்களையும் காண்போம்.
No comments:
Post a Comment